ஷா ஆலாம், செப்.15: கிள்ளான் மாநகரில் குப்பைகளை வீசும் நபர்களைக் கண்டறிய சிறப்பு அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒன்பது பேருக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டது.
கிள்ளான் அரச மாநகர மன்றத்தின் (MBDK) சுற்றுச்சூழல் சேவை துறை மேற்கொண்ட இந்த நடவடிக்கை, ஜாலான் போஸ் பாரு பகுதியில் நடத்தப்பட்டது.
அமலாக்க நடவடிக்கையின்போது, பொது இடங்களில் வீசப்பட்டிருந்த பல்வேறு வகை சிறிய அளவிலான குப்பைகள் கண்டறியப்பட்டன.
அவற்றில் சிகரெட் துண்டுகள், காகிதங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உணவுக் கழிவுகள் உள்ளிட்டவை இருந்ததாக MBDK தெரிவித்தது.

பொது இடங்களில் சிறிய அளவிலான கழிவுகளை அலட்சியமாக வீசிய குற்றத்திற்காக, சம்பந்தப்பட்ட ஒன்பது பேருக்கும் 2007ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட MPK குப்பை அகற்றல் விதிமுறைகளின் சிறு விதி 4-ன் கீழ் உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டதாக MBDK தனது ஃபேஸ்புக் தெரிவித்தது.
பொது இடங்களில் குப்பைகளைக் கண்ட இடங்களில் வீசாமல், அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும் என MBDK பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.
கிள்ளான் மாநகரம் தொடர்ந்து தூய்மையாகவும், மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சுகாதாரமான சூழலைக் கொண்டதாகவும் திகழ்வதை உறுதிசெய்ய பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும் MBDK வலியுறுத்தியுள்ளது.







