ஷா ஆலாம், ஆகஸ்ட் 1: கிள்ளான் துறைமுகத்தின், தாமான் தெலுக் கெடுங் இண்டா பகுதியில் தெரு நாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையின் போது, வளர்ப்பு நாய் ஒன்று உயிரிழந்த சம்பவம் குறித்த விசாரணையை கிள்ளான் அரச மாநகர் மன்றம் (MBDK) காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளது.
தெருநாய்களின் பெருக்கத்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து குடியிருப்பாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, அச்சம்பவம் நிகழ்ந்ததாக மாநகர் மன்றம் அதன் அறிக்கையில் தெரிவித்தது.
தெருநாய்களைப் பிடிக்கும் அந்த நடவடிக்கையில் மாநகர் மன்றத்தின் 11 ஊழியர்களும் அம்மன்றத்தின் சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஓர் அதிகாரியும் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50 பொதுமக்களும் ஈடுபட்டனர்.
அந்த நடவடிக்கையின்போது, ஜாலான் சமா காகா 20 பகுதியில், மாநகர் மன்ற ஊழியர்கள் அவர்களது பணியை மேற்கொள்ள விடாமல், தனிநபர் கும்பல் ஒன்று தடுத்தது.
அதில் ஒரு நபர், நாயின் கழுத்தில் இருந்த கம்பியை கத்தியால் அறுக்க முற்பட்டதோடு, நாயை விடுவிக்கவில்லை என்றால் தன்னை காயப்படுத்திக் கொள்ளப் போவதாகாவும் அச்சுறுத்தினார்.
அந்த பதற்றமான சூழ்நிலையில் அந்நாயின் கழுத்தில் இருந்த கம்பியை அகற்றும் முயற்சி சிக்கலாகி அந்நாய் உயிரிழக்க நேரிட்டதாக அம்மன்றம் தெரிவித்தது.
அச்சம்பவம் தொடர்பில் மாநகர் மன்றம் தனது வருத்தத்தை தெரிவித்த அதே வேளை , மக்கள் தங்களது வளர்ப்பு பிராணிகளுக்கு முறையான லைசென்ஸ் இருப்பதை உறுதி செய்வதோடு, அவை வெளியில் சுற்றித் திரிவதை தடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டது.







