ஷா ஆலாம், ஆகஸ்ட் 18: சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த கோலாலம்பூர், சிலாங்கூர் சீன வர்த்தக மற்றும் தொழில்துறையினருடன் (KLSCCCI) கலந்துரையாடல் நடைபெற்றது.
இதனை மாநில முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் இங் சீ ஹான் நடத்தினார்.

KLSCCCI துணைத் தலைவர் லீ இயூ சென் தலைமையிலான குழுவினருடன் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், சிலாங்கூரின் பொருளாதார பலத்தை மேலும் பயன்படுத்திக் கொள்வது மற்றும் வர்த்தகத் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இன்றைய நிலையில் வர்த்தகத் துறையில் போட்டித்தன்மை அதிகரித்து வருகிறது.
அதனால், நிறுவனங்கள் தங்களது போட்டித்தன்மையையும் வளர்ச்சியையும் தக்கவைத்துக்கொள்ள திறமையான மனிதவளம், சந்தை வாய்ப்புகள் மற்றும் வர்த்தகத்துக்கு ஆதரவான சூழல் ஆகியவை அவசியம் என இங் சீ ஹான் தெரிவித்தார்.
மாநில அரசுக்கும் வர்த்தக சமூகத்துக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் அடிக்கடி நடத்தப்படுவது இரு தரப்பினருக்கும் இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்தி புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
KLSCCCI உடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல விரும்புவதாக இங் சீ ஹான் கூறினார்.
சிலாங்கூர் தொடர்ந்து செழிப்புடனும் வளர்ச்சியுடனும் முன்னேறுவதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.







