போர்ட்கிள்ளான், செப். 12: சிலாங்கூரில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சேவை மற்றும் உற்பத்தித் துறைகள் முதலீட்டு மதிப்பில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளன.
இதனை மாநில முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் இங் சீ ஹான் தெரிவித்தார்.
இந்த இரண்டு துறைகளும் கடந்த ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் RM70 பில்லியன் முதலீட்டை ஈர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அடுத்த சில மாதங்களுக்குள் RM80 பில்லியன் முதலீட்டு இலக்கை எட்ட முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சிலாங்கூருக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் மாநில அரசாங்கம், Invest Selangor Bhd மற்றும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் (MIDA) ஆகியவற்றுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகிப்பதாக இங் சீ ஹான் தெரிவித்தார்.
சிலாங்கூரின் உற்பத்தி மற்றும் பொறியியல் துறைகளை மேலும் உயர்ந்த மதிப்புச் சங்கிலிக்குக் கொண்டு செல்வதே மாநில அரசாங்கத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, முதலீட்டு வேகத்தையும் தற்போதைய போக்குகளையும் அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆண்டு மாநிலத்தின் முதலீட்டு மதிப்பு RM100 பில்லியனைத் தாண்டும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.







