ஷா ஆலாம், ஆகஸ்ட் 17: கோலா லங்காட் மாவட்டத்தில் இந்த ஆண்டு 32ஆவது தொற்றுநோயியல் வாரம் வரையில் மொத்தம் 1,065 டிங்கி சம்பவங்களும், ஒரு மரணமும் பதிவாகியுள்ளன.
இதனிடையே, தற்போது 19 டிங்கி பாதிப்பு பகுதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
டிங்கி சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருவதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தங்கள் பகுதியில் டிங்கி சம்பவம் ஏற்படும் வரை காத்திருக்க வேண்டாம் என மாவட்ட சுகாதார அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
இதையடுத்து, பொதுமக்கள் வாரத்திற்கு குறைந்தது 10 நிமிடங்களையாவது ஒதுக்கி, தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் ஏடிஸ் கொசுக்கள் பெருகக்கூடிய இடங்களைத் தேடி அகற்றுமாறு கோலா லங்காட் மாவட்ட சுகாதார அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
டிங்கி தொடர்பான தகவல்கள் அல்லது புகார்களைத் தெரிவிக்க விரும்புவோர் 03-3187 2355 என்ற கோலா லங்காட் மாவட்ட சுகாதார அலுவலகத் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
தேசிய அளவில், 32ஆவது தொற்றுநோயியல் வாரம் வரையில் மலேசியாவில் 57,662 டிங்கி சம்பவங்களும் 51 மரணங்களும் பதிவாகியுள்ளன.
சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் 25,089 சம்பவங்களும் 28 மரணங்களும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.







