ஜகார்த்தா, ஆகஸ்ட் 17 — இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் அமைந்துள்ள ஃப்ளோரஸ் தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் இன்று அதிகாலை மேலும் இரண்டு மிதமான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த சனிக்கிழமை 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தில் குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது இந்த இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
இன்று அதிகாலை 12.26 மணிக்கு 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு காலை 7.46 மணிக்கு 5.8 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கிழக்கு நுசா தெங்காராவின் நகேகியோ, என்டே, மங்கராய், நகடா மற்றும் கிழக்கு மங்கராய் உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டன.
இந்த இரண்டு நிலநடுக்கங்களாலும் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை. இருப்பினும், அடுத்தடுத்து ஏற்படக்கூடிய நில அதிர்வுகள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







