தாவாவ், ஆகஸ்ட் 16 — உலகப் பொருளாதாரம் தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டாலும், 2027ஆம் ஆண்டுக்கான நாட்டின் வரவுசெலவுத் திட்டத்தில் SARA உதவித் திட்டம் தொடர்ந்து அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும்.
இதனை இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஸிசான் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலும் நிதியுதவிக்கு தேவையான ஒதுக்கீட்டை அரசாங்கம் தொடர்ந்து வழங்கும்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பாதிக்கப்படும் மக்களின் சுமையைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும் என அமைச்சர் கூறினார்.
இந்த ஆண்டு SARA மற்றும் STR ஆகிய இரு உதவித் திட்டங்களுக்காக மொத்தம் RM15 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
SARA உதவியைப் பெறும் சுமார் 90 லட்சம் பேரில் 99 விழுக்காட்டினர் அதனைப் பயன்படுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் இந்த உதவித் திட்டம் உண்மையில் அடிமட்ட நிலையில் உள்ள இலக்குக் குழுவினரைச் சென்றடைந்துள்ளது உறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, உலகளாவிய பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் சூழலில் நிச்சயமற்ற நிலை காணப்பட்டாலும், மலேசியப் பொருளாதாரம் தொடர்ந்து வலுவான வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருவதாக அமீர் ஹம்சா குறிப்பிட்டார்.







