புத்ராஜெயா, ஆகஸ்ட் 6 – சுதந்திர தினத்தை முன்னிட்டு, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் 100 ரிங்கிட் 'சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா' (SARA) நிதியுதவி வழங்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என நிதி அமைச்சு தெளிவுப்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் விளம்பரப் படம் மற்றும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என்றும், அதனை நம்பவோ அல்லது மற்றவர்களுடன் பகிரவோ கூடாது என்றும் அமைச்சு அதிகாரப்பூர்வ அறிக்கையில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அந்தப் பதிவில் கூறப்பட்டிருப்பதுபோல் SARA நிதியுதவி தொடர்பாக இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் நிதி அமைச்சால் வெளியிடப்படவில்லை.
எனவே, பொதுமக்கள் இதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்புவதையும், அவற்றைப் பகிர்வதையும் தவிர்க்க வேண்டும்.
அரசாங்கத்தின் நிதியுதவி மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை நிதி அமைச்சின் அதிகாரப்பூர்வ தளங்கள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்கள் வாயிலாக மட்டுமே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
தவறான தகவல்கள் பொதுமக்களை குழப்பத்திற்கும் தவறான புரிதல்களுக்கும் உள்ளாக்கக்கூடும் என்பதால், தகவல்களை பகிர்வதற்கு முன்பு அவற்றின் உண்மைத்தன்மையை உறுதி செய்வது அனைவரின் பொறுப்பாகும்.







