சிரம்பான், ஜூலை 23 - சாரா(SARA) ரஹ்மா உதவித் தொகையை அரசாங்கம் விரைவில் அதிகரிக்கவிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மக்களுக்கு என பல்வேறு உதவித் திட்டங்கள் இருந்தாலும், அவர்கள் தொடர்ந்து எதிர்நோக்கும் நிதிச் சுமையை அரசாங்கம் கருத்தில் கொண்டுள்ளது.
"STR, SARA போன்ற உதவித் தொகைகள் உள்ளன. டத்தோ ஶ்ரீ அமினுடின் சிலாங்கூர் மாநில அரசாங்க ஊழியர்களுக்கு உயர்வான போனஸ் தொகையை வழங்குகின்றார். ஆனால் பிரச்சனை தீர்ந்ததா ? இல்லை "
"எனவே, மக்களின் பிரச்சனைகளை செவிமடுக்கிறோம். விரைவில் சாரா உதவித் தொகையை அதிகரிப்போம்." என நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு நேற்றிரவு செனாவாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும்போது பிரதமர் அந்த உத்தரவாதத்தை வழங்கினார்.
நாட்டின் பொருளாதார நிலை அனுமதித்தால், மடானி அரசாங்கம் எஸ்.டி.ஆர், சாரா ( STR, SARA) போன்ற மக்களுக்கான உதவித் திட்டங்களை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்குமென அண்மையில் அன்வார் கூறியிருந்தார்.
அதன் தொடர்பில், கருவூல தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஜோஹன் மஹ்மூட் மெரிக்கானுடன் கலந்து பேசப்பட்டதாகவும், 2027 வரவு செலவுத் திட்ட தாக்கலின்போது அது கருத்தில் கொள்ளப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.







