குவாந்தான், ஆகஸ்ட் 12 — போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களை (MC) விற்ற இருவருக்கு, குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தலா 14 நாட்கள் சிறைத்தண்டனையும் RM8,000 அபராதமும் விதித்தது.
வேலையில்லாத முகமட் ஷுக்ரி சைனுடின் (28) மற்றும் தோட்டத் தொழிலாளரான முகமட் அஸ்ராஃப் சுனைடி (31) ஆகிய இருவரும் மாஜிஸ்திரேட் எலினா ஒத்மான் முன்னிலையில் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புகொண்டனர்.
இருவரும் கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் ஜூலை 13ஆம் தேதி 2026 வரை, ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையின் பெயரையும் அங்கு பணிபுரியும் மருத்துவர் ஒருவரின் கையொப்பத்தையும் பயன்படுத்தி, 40 போலி MC-க்களை தயாரித்து விற்றுள்ளனர்.
அவர்கள் மீது குற்றவியல் சட்டப் பிரிவு 465-ன் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அந்தப் பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் போலியான MC சான்றிதழ்களைப் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகமும் மருத்துவமனையும் காவல்துறையில் புகார் அளித்திருந்தன.
அந்தப் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், 17 தொழிற்சாலை ஊழியர்களை உள்ளடக்கிய மொத்தம் 40 MC சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது.
அந்த போலி MC-க்கள் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரில் ஒருவரால் விற்பனை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலியான முத்திரை ஒன்றும், 24 போலி MC சான்றிதழ்களும் பறிமுதல் செய்யப்பட்டன.







