ஷா ஆலம், ஆகஸ்ட் 11 — இவ்வாண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை, சிலாங்கூர் மாநில அரசின் ‘இல்திஸாம் சிலாங்கூர் சிஹாட்’ (ISS) சுகாதாரத் திட்டத்திற்காக RM17.15 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
இதனை மாநில பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார். மேலும், 2026ஆம் ஆண்டுக்கான ISS திட்டத்திற்கு சுமார் RM20 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநில மக்களுக்கு மாநில அரசின் நிதியுதவியுடன் சுகாதார அட்டை வழங்கும் திட்டமாக ISS செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் வெளிநோயாளர் சிகிச்சை, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சேவைகளுக்கான செலவுகளை ஈடுகட்ட முடியும்.
இவ்வாண்டு இத்திட்டத்தின் கீழ் 100,000 பயனாளிகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக ஜமாலியா தெரிவித்தார். தற்போது ISS திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் RM10,000 வரை மருத்துவச் செலவுக்கான பாதுகாப்பு வழங்கப்படுவதாக அவர் விளக்கினார்.
இந்த நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து மாநில அரசு பரிசீலிக்க முடியும் என்றாலும், திட்டத்தின் பயன்களை மேலும் விரிவுபடுத்தினால் அதனால் பல்வேறு தாக்கங்கள் ஏற்படக்கூடும். குறிப்பாக பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிலை உருவாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ISS திட்டத்தின் கீழ் அடிப்படை சுகாதாரப் பரிசோதனைகளும் வழங்கப்படுகின்றன. கூடுதலாக, மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் மாமோகிராம் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை உள்ளிட்டவை வெவ்வேறு திட்டங்களின் வாயிலாக வழங்கப்படுவதாக ஜமாலியா தெரிவித்தார்.
ISS திட்டத்தின் மருத்துவக் கோரிக்கைகளுக்கான பணம் 60 முதல் 90 வேலை நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு ஆகும்.
இதுவரை மாநில அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட அனைத்து நிலுவைத் தொகை தொடர்பான விவகாரங்களும் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஜமாலியா கூறினார்.







