ஷா ஆலம், ஆகஸ்ட் 10 : சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (PKNS), RM103.69 மில்லியன் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், RM6.1 பில்லியன் வரை கடன் சுமையைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படும் ஊடக அறிக்கைகளை மறுத்துள்ளது.
கழகம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் அந்த அவதூறுகள் துல்லியமற்றவை, தவறாக வழிநடத்தக்கூடியவை மற்றும் PKNS-இன் ஒட்டுமொத்த நிதி நிலையை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என அக்கழகம் குறிப்பிட்டது.
மேலும் ‘ரேம் ரேட்டிங்ஸ்’ (RAM Ratings) அமைப்பின் சுயேட்சை மதிப்பீடு, PKNS- இன் நிதி நிலைமை தொடர்ந்து வலுவாகவும் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
அதோடு, ‘ரேம் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் PKNS-க்கான தனது ‘AA1/Stable/P1’ தரவரிசையை இன்னும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
எனவே, PKNS-இன் ஒட்டுமொத்த நிதி நிலை மற்றும் நிதியளிப்பு கட்டமைப்பை விளக்காமல், நட்டம் மற்றும் கடன் தொகையை மட்டும் தனித்து மேற்கோள் காட்டுவது உண்மைகளையும் PKNS-இன் உண்மையான நிலவரத்தையும் பிரதிபலிக்காத ஒரு தவறான பார்வையை உருவாக்குவதற்கே வழிவகுக்கும் என அக்கழகம் கூறியது.







