ஷா ஆலம், ஆகஸ்ட் 9 - சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (PKNS) கடந்த ஆகஸ்ட் முதலாம் தேதி தனது 62-ஆவது நிறைவாண்டைக் கொண்டாடியது.
அந்நிறைவாண்டின் கொண்டாட்டமாக, ஊழியர்களிடையே உறவை வலுப்படுத்தவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் 'பிகேஎன்எஸ் குழும நட்புறவு நடைப்பயணத்துக்கு' (PKNS Group Mingle Walk) ஏற்பாடு செய்தது.
பிகேஎன்எஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் ஊழியர்கள் உட்பட சுமார் 700 பேர் கலந்துகொண்ட அந்த நடைப்பயணம், இங்குள்ள கலேரியா எஸ்ஏ சென்ட்ரலில் (Galeria SA Sentral) தொடங்கி மீண்டும் அங்கேயே நிறைவடைந்தது.
அந்த நடைப்பயணம் 2.8 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியிருந்தது.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, பிகேஎன்எஸ் குழும ஊழியர்கள் ஒன்றிணைந்து ஆரோக்கியமான செயல்களில் ஈடுபட வழிவகுப்பதுடன், ஊழியர்களுக்கும் பங்காளிகளுக்கும் இடையிலான உறவையும் நெருக்குமாக்குவதாக பிகேஎன்எஸ் வர்த்தக சேவையின் மூத்த நிர்வாகி சப்னா துர்மிதி தெரிவித்தார்.

"நாங்கள் பிகேஎன்எஸ் மற்றும் துணை நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களையும் இதில் ஈடுபடுத்தினோம். சிலர் தங்களின் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து வந்திருந்தனர். இதன் மூலம் அனைவரும் ஒருவரையொருவர் அறிந்துகொள்ள முடிந்தது. இது பிகேஎன்எஸ் நிறுவனத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான கூட்டுப் பணிகளில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
காலை 7.30 மணிக்கே உடற்பயிற்சி அமர்வுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இதில் பிகேஎன்எஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ மஹ்முட் அப்பாஸ் மற்றும் சிலாங்கூர் பெண்கள் நலன் - தொண்டு நிறுவனத்தின் (PEKAWANIS) தலைவர் டத்தின் ஸ்ரீ மாஸ்டியானா முஹம்மட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பங்கேற்பாளர்கள் பெர்சியாரான் பெர்பண்டாரான், பெர்சியாரான் தாசிக், பெர்சியாரான் டத்தோ மந்திரி மற்றும் பெர்சியாரான் தாமாய் வழியாக நடந்து சென்று தொடக்கப் புள்ளியை வந்தடைந்தனர்.
இந்த நடைப்பயணத்தின் போது, பங்கேற்பாளர்கள் ஷா ஆலம் மாநகரத்தின் சில மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களைக் காணும் வாய்ப்பைப் பெற்றனர். இதில் கிராண்ட் மெர்கூர் ஹோட்டலாக மாற்றப்பட்ட பிளாசா பெராங்சாங், எஸ்சிசி மால் (SACC Mall), பிகேஎன்எஸ் ஷா ஆலம் வளாகம் மற்றும் ஷா ஆலம் மாநாட்டு மையம் (SACC) ஆகியவை அடங்கும்.

அதே வேளையில், நகரின் மையப்பகுதியில் பாதசாரிகளின் வசதியையும் இணைப்பையும் மேம்படுத்துவதற்காக ஜாலான் மஜ்லிஸ் மற்றும் பெர்சியாரான் டத்தோ மந்திரி சுற்றியுள்ள பாதசாரி உள்கட்டமைப்புகளை பிகேஎன்எஸ் தற்போது தீவிரமாக மேம்படுத்தி வருகிறது.
பங்கேற்பாளர்கள் நடைப்பயணத்தை முடித்த பிறகு அவர்களுக்கு பிகேஎன்எஸ் துணை நிறுவனங்களால் அமைக்கப்பட்ட 10 அங்காடிகள் மூலம் நாசி லெமாக், செண்டோல், ஐஸ்கிரீம், காபி மற்றும் லக்ஸாம் போன்ற பல்வேறு உணவு மற்றும் பானங்கள் இலவசமாக வழங்கப்பட்டன என்று சப்னா கூறினார்.

இந்நிகழ்ச்சி இரண்டாவது ஆண்டாக நடத்தப்பட்டாலும், இதற்கு கிடைத்த பேராதரவு எதிர்காலத்திலும் தொடர ஊக்கமளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், பிகேஎன்எஸ்-ன் 62-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இம்மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளன.
புத்ராஜெயாவில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் (IKN) புற்றுநோய் நோயாளிகளைச் சந்தித்து நன்கொடைகளை வழங்கும் 'சியாராஹ் காசி' (Ziarah Kasih) என்ற சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டமும், ஆண்டுதோறும் நடத்தப்படும் நன்றி செலுத்தும்' வழிபாட்டு நிகழ்ச்சியும் இதில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.










