ஷா ஆலாம், ஆகஸ்ட் 10 - ஆகஸ்ட் 8 , 9-ஆம் தேதிகளில் ஷா ஆலாம் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2026 மெகா ஜோப்கேர் சிலாங்கூர் (Mega JobCare Selangor) திட்டத்தின் வாயிலாக 1, 641 பேர் நேரடி வேலை வாய்ப்பைப் பெற்றனர்.
மேலும் 2,774 பேர் இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர்.
சிலாங்கூர் மாநில மனித வளத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு இந்த தகவலை வெளியிட்டார்.
147 முதலாளிமார்ளை ஓரிடத்தில் இணைய வைத்த இந்த இரு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் 20,000 -க்கும் அதிகமானோர் பங்கேற்று பல்வேறு வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களைப் பெற்றதாகப், பாப்பாராய்டு தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த 2026 மெகா ஜோப்கேர் திட்டம் திகழ்கிறது.
வேலை தேடும் பொதுமக்களுக்கும், திறமையான பணியாளர்களைத் தேடும் நிறுவனங்களுக்கும் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சி, மக்களின் தொழில் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு வழிகாட்டும் தளமாகவும் அமைந்தது.
இந்த நிகழ்ச்சி சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் ( RS -2 ) ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.







