ஷா ஆலாம், ஆகஸ்ட் 12 — சிலாங்கூர் மாநில அரசின் துணை நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் RM3,100 ஊதியம் வழங்கும் திட்டத்தை மாநில அரசு பரிசீலித்து வருவதாக மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.
இந்த முயற்சியானது ஊழியர்களின் நலன், நிறுவனங்களின் போட்டித்திறன் மற்றும் நிதி நிலைத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆராயப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
மாநிலத்தின் துணை நிறுவனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் 27.3 விழுக்காட்டினர் மாதம் RM3,100 என்ற நியாயமான குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், 59.1 விழுக்காடு நிறுவனங்கள் இன்னும் அதனை அமல்படுத்தத் தயாராக இல்லை. மேலும் 13.6 விழுக்காடு நிறுவனங்கள் கட்டம் கட்டமாக இந்த ஊதியத்தை அமல்படுத்துவதற்கான தங்களது திறனை மதிப்பீடு செய்து வருவதாகவும் அல்லது ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, மத்திய அரசின் கொள்கைக்கு இணங்க, சிலாங்கூர் மாநில அரசும் மாதம் RM1,700 என்ற குறைந்தபட்ச ஊதிய முறையை அமல்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, GLIC மற்றும் GLC நிறுவனங்களின் கட்டமைப்பில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களில் 189,817 பேர், அதாவது 91.7 விழுக்காட்டினர், RM3,100 என்ற நியாயமான குறைந்தபட்ச ஊதியத்தைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







