கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 — பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனை மற்றும் பரிந்துரையின் அடிப்படையில், தற்போது மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் தேவையான மருத்துவச் சிகிச்சை நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறார்.
பிரதமரின் மூத்த செய்திச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபைடா வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் அன்வார் இப்ராஹிம் சுமார் இரண்டு நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை நடைமுறைகள் சுமுகமாக நடைபெறுவதற்காக அனைவரும் பிரார்த்திக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், பிரதமர் அன்வார் இப்ராஹிம் நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் வழக்கம்போல் தனது பணிகளைத் தொடர இறைவன் அருள் புரிவார் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் இரண்டு நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை தொடர்பான மேல் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.







