ஷா ஆலம், ஆகஸ்ட் 9 : சிலாங்கூரின் ஐந்து மாவட்டங்களில் இன்று மதியம் 12 மணி வரை இடியுடன் கூடிய இடிமின்னல், பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபாக் பெர்னாம் (Sabak B ernam), கோலா சிலாங்கூர் (Kuala Selangor), கிள்ளான் (Klang), கோலா லங்காட் (Kuala Langat) மற்றும் சிப்பாங் (Sepang) ஆகிய பகுதிகளே பாதிப்புக்குள்ளாகுமென மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) தெரிவித்துள்ளது.
இதே காலகட்டத்தில் நெகிரி செம்பிலானில் உள்ள போர்ட் டிக்சன் (Port Dickson) மற்றும் மலாக்காவிலும் மோசமான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
"ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவோடு, இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படும் போதோ அல்லது அது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் போதோ இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கை என்பது குறுகிய கால எச்சரிக்கையாகும், இது வெளியிடப்பட்டதில் இருந்து அதிகபட்சமாக ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்," என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் , MetMalaysia வெளியிடும் சமீபத்திய வானிலை நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.






