ஷா ஆலாம், ஆகஸ்ட் 7 : சிலாங்கூர் இரண்டாவது திட்டம் (RS-2) என்பது 2030 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கான ஒரு மாநில வளர்ச்சித் திட்டம் மட்டுமல்ல, அது சிலாங்கூர் மக்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக மாநில அரசு வழங்கும் வாக்குறுதியாகுமென சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி தெரிவித்தார் .
"அறிவு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் மனித மூலதனத்தில் நாம் தொடர்ந்து முதலீடு செய்வோம் என்பதற்கான வாக்குறுதி இதுவாகும்.
பொருளாதார வளர்ச்சி என்பது சமூக நீதியிலிருந்து பிரிக்க முடியாதது என்பதற்கான வாக்குறுதியும் இதுவாகும்.
சபாக் பெர்னாம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோலா லங்காட், சிப்பாங், பெட்டாலிங், கோம்பாக் மற்றும் உலு லங்காட் ஆகிய அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒவ்வொரு குழந்தையும் முழு நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்குவதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு என்பதற்கான வாக்குறுதி இதுவாகும்," என்று அவர் கூறினார்.
இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் RS-2 திட்டத்தை முன்வைத்து ஆற்றிய உரையின் தொடக்கத்தில், இந்த ஐந்தாண்டு காலத்திற்காக திட்டமிடப்பட்டுள்ள கொள்கை மற்றும் வளர்ச்சித் திட்டத்தின் தத்துவ அடிப்படையாக 'நீதி' என்னும் கருத்தாக்கத்தை அமிருதின் கோடிட்டுக் காட்டினார்.
நீதி மற்றும் அரசுமுறை குறித்து, கிரேக்க நாகரிகம் முதல் நவீன உலகம் வரையிலும், இஸ்லாமிய நாகரிகம் மற்றும் மலாய் உலகம் ஆகியவற்றின் முடிவுகளிலிருந்தும் உலக அறிஞர்களின் சிந்தனைகளை அவர் மேற்கோள் காட்டினார்.
"நீதி என்பது வெறும் ஒரு தார்மீக லட்சியம் மட்டுமல்ல என்பதை நான் வலியுறுத்துகிறேன். நீதி என்பது ஒரு வளர்ச்சி உத்தி ஆகும், ஏனெனில் நீதியிலிருந்தே நம்பிக்கை பிறக்கிறது," என்று அவர் கூறினார்.
அந்த நம்பிக்கையின் மூலமே நிச்சயம் உறுதிப்பாடு, முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், அதன் தொடர்ச்சியாக, கண்ணியமான மற்றும் நல்ல எதிர்காலத்தைக் கொண்ட ஒரு சமுதாயம் உருவாகும் என்றும் அமிருதின் விளக்கினார்.
"இதுவே உண்மையான செழுமையின் சங்கிலித்தொடர் ஆகும்," என்று அவர் மேலும் கூறினார்.
RS-2 திட்டம், சிலாங்கூரை மலேசியாவிலேயே 500 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருளாதாரத்தைக் கொண்ட முதல் மாநிலமாக மாற்றுவதையும், மக்களுக்கு அதிக சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புகளை வழங்குவதையும், அதன் ஒன்பது மாவட்டங்களுக்கு இடையிலான பொருளாதார இடைவெளியைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.









