ஷா ஆலாம், ஆகஸ்ட் 6: RS-2 திட்டம், சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (SME) போட்டித்திறனை மேம்படுத்தி, அவற்றை உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இணைக்கும் முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று சிலாங்கூர் மாநில மனிதவள மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தெரிவித்தார்.
மேலும், உள்ளூர் நிறுவனங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், தொழில்துறை சூழலை மேம்படுத்துதல், நவீன தொழில்நுட்ப பயன்பாட்டை விரிவுபடுத்துதல், ஆய்வு, மேம்பாடு, வணிகமயமாக்கல் மற்றும் புத்தாக்க நடவடிக்கைகளை ஊக்குவித்தல், உள்ளூர் தொழிலாளர்களின் திறன்களை உயர்த்துதல் ஆகியவை இந்த முயற்சியின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான அவர், RS-2 திட்டத்தின் கீழ், உயர் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகள் போன்ற அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதாரத் துறைகளை மேம்படுத்துவதன் மூலம் சிலாங்கூரின் பொருளாதாரத்தை வலுப்படுத்த மாநில அரசு கவனம் செலுத்தும் என்றார்.
இந்த அணுகுமுறையின் மூலம் தரமான வெளிநாட்டு முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்க முடிவதுடன், உயர்திறன் கொண்ட வேலைவாய்ப்புகள் உருவாகும், தொழில்நுட்பப் பரிமாற்றம் விரைவுபெறும், உள்ளூர் திறமையாளர்கள் உருவாக்கப்படுவார்கள் மற்றும் மாநிலத்தின் தொழில்துறை சூழலும் மேலும் வலுப்பெறும் என்று அவர் தெரிவித்தார்.
இரண்டாவது சிலாங்கூர் திட்டம், வெளிநாட்டு முதலீடுகளின் வளர்ச்சி உள்ளூர் நிறுவனங்கள், சமூகங்கள் மற்றும் மாநிலத்தின் முழுமையான தொழில்துறை மதிப்புச் சங்கிலிக்கும் பயனளிக்கும் வகையில், மேலும் உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதார அமைப்பை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் பாப்பாராய்டு கூறினார்.







