ஷா ஆலம்,ஆகஸ்ட் 6 : நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் இரண்டாவது சிலாங்கூர் திட்டம் (RS-2), மாநிலத்தின் முழுமையான பொருளாதார வளர்ச்சியையும் மாவட்டங்களுக்கு இடையிலான வளர்ச்சி இடைவெளியைக் குறைப்பதிலும் கவனம் செலுத்துமென சிலாங்கூர் மெந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி தெரிவித்தார்.
சிலாங்கூரின் பொருளாதார வெற்றி என்பது வெறும் வளர்ச்சிக்கான எண்களை மட்டும் கொண்டு அளவிடப்படாது. மாறாக, மக்களின் வாழ்க்கைத் தர உயர்வை வைத்தே அளவிடப்படும் என்றாரவர்.
அதே வேளை, வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான கொள்கைகளை வகுப்பதில் " மரியாதைக்குரிய வாழ்க்கை" என்ற கொள்கை புதிய அளவுகோலாக அமையும்.
அந்த மரியாதைக்குரிய வாழ்க்கை என்பது வருமான எண்களை மட்டும் கொண்டு அளவிடப்படுவதில்லை.
மாறாக, அந்த வருமானம் எவ்வாறு ஈட்டப்படுகிறது, அடிப்படைத் தேவைகளை மக்கள் எளிதாக பெறுகின்றனரா, பொருளாதார, சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் எந்தளவு உள்ளன என்பதும் கருத்தில் கொள்ளப்படுமென மெந்திரி பெசார் கூறினார்.
மக்கள் தங்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தங்களின் சுயமரியாதையைக் குறைத்துக் கொள்ளும் விஷயங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படாமல் இருப்பதை உறுதி செய்வதும் அதில் அடங்குமென இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது அமிருடின் ஷாரி தெரிவித்தார்.







