ஷா ஆலாம், ஆகஸ்ட் 5 – பொதுமக்கள், அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் மலேசிய அரச மலேசியக் காவல்துறை (PDRM) ஆகியவற்றுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் காரணமாக, சிலாங்கூரில் இந்த ஆண்டு முழுவதும் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷஸெலி கஹார் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் வழங்கும் தகவல்களும் சமூகத்துடன் காவல்துறை பேணிவரும் நெருங்கிய ஒத்துழைப்பும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் அதிக செயல்திறனுடன் அமல்படுத்தப்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக என அவர் கூறினார். குறிப்பாக காஜாங் மாவட்டத்தில் குற்ற எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், சட்டவிரோத மோட்டார் பந்தயம், போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு சவால்களாக உள்ளன என்றும் டத்தோ ஷஸெலி சுட்டிக்காட்டினார்.
அமைதியும் பொது பாதுகாப்பும் நிலைத்திருக்க, தங்களது பகுதிகளில் நடைபெறும் சம்பவங்கள், புகார்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தொடர்ந்து காவல்துறைக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.







