ஜகார்த்தா, ஆகஸ்ட் 5 — கோலாலம்பூரிலிருந்து இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள ஜுவாண்டா அனைத்துலக விமான நிலையம் வழியாக, சுமார் ஒரு கிலோகிராம் ஷாபு மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எஸ்டசி மாத்திரைகளைக் கடத்த முயன்ற 22 வயதுடைய மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 2.9 பில்லியன் ரூபியா (RM658,460) ஆகும்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் எட்டு பைகளில் பொட்டலமிடப்பட்டிருந்தன என்று ஜுவாண்டா கடற்படை வான்வழித் தளத்தின் தளபதி கர்னல் ஹெனோச் நசாரியுஸ் விர்சவான் தெரிவித்தார்.
அந்தச் சந்தேக நபரின் உடைமைகள் மீது மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்-கதிர் (X-ray) ஸ்கேன் பரிசோதனையில் எந்தவொரு சந்தேகத்திற்கிடமான பொருட்களும் சிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய உடல் பரிசோதனையில், அந்த ஆணின் உடலில் கருப்பு நிறப் பட்டைக்குப் பின்னால் போதைப்பொருள் ஒட்டப்பட்டிருந்தது அம்பலப்படுத்தப்பட்டது.
"இந்த நடவடிக்கையின் மூலம் ஏறக்குறைய 6,584 பேர் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகுவதில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்" என்று அவர் குறிப்பிட்டார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து ஜாகார்த்தாவில் உள்ள சோகர்னோ-ஹத்தா பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தடைந்த 39 வயதுடைய மலேசிய விமானி ஒருவரின் உடமைகளில் இருந்து சுமார் 25 கிலோகிராம் எஸ்டசி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.







