ஷா ஆலாம், ஆகஸ்ட் 3: சிலாங்கூரில் 2,000 ரிங்கிட்டுக்கும் குறைவான மாத வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 106,435 பள்ளி மாணவர்கள் 'சிலாங்கூர் ஊட்டச்சத்துத் திட்டம்' (Nutrisel) வாயிலாக இலவசக் காலை உணவைப் பெறத் தொடங்கியுள்ளனர். இத்திட்டம் இன்று ஒரே நேரத்தில் 962 பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
பண்டார் பாரு சுங்கை பூலோ தேசியப் பள்ளியில் (SK) மாநிலப் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு (UPEN) பிரதிநிதிகளுடன் 'மீடியா சிலாங்கூர்' மேற்கொண்ட ஆய்வில், உணவு தயாரிக்கும் பணிகள் எவ்விதத் தடையுமின்றிச் சீராக நடைபெற்றதும், முதலாம் நாள் அமலாக்கத்தின் கீழ் 87 மாணவர்கள் இலவசக் காலை உணவைப் பெற்றதும் கண்டறியப்பட்டது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் கற்றல் அமர்வுகளைத் தொடங்குவதற்கு முன்பாகச் சமச்சீரான மற்றும் சத்தான உணவைப் பெற இந்த நடவடிக்கை பெரிதும் உதவுகிறது என்று பண்டார் பாரு சுங்கை பூலோ தேசியப் பள்ளியின் தலைமையாசிரியர் நோர்சைனிசா புயோங் கூறினார்.
"B40 குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோருக்கு இத்திட்டம் பெரும் உதவியாக உள்ளது. முதல் நாளான இன்று மாணவர்கள் உணவைப் பெற்றுக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைந்ததைக் காண முடிந்தது. மாநில அரசுக்கும் டத்தோ மந்திரி பெசாருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அவர் 'மீடியா சிலாங்கூர்' ஊடகத்திடம் தெரிவித்தார்.
ஒவ்வொரு குழந்தைக்கும் சமச்சீரான உணவு அவசியம் என்றும், அவர்களின் உடல் வளர்ச்சிக்கும் கூர்மையான அறிவுக்கும் அது தேவையாகும் என்றும் குறிப்பிட்ட அவர், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குச் சிறந்த உணவை வழங்குவதில் இது உறுதுணையாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சகத்தின் உணவுத் திட்டத்திற்கு (RMT) கூடுதலாக Nutrisel திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது மாணவர்களின் நலன் மீது மாநில அரசு கொண்டுள்ள அக்கறையையும் வெளிப்படுத்துகிறது.
அதிகமான மாணவர்கள் சத்தான உணவின் பலன்களைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, இத்திட்டம் தொடரப்பட வேண்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"இது ஒரு சிறந்த திட்டமாகும். சிலாங்கூர் மட்டுமே இதனைச் செயல்படுத்துவதால், இதனைத் தொடர்ந்து நிலைநிறுத்தலாம். இது மாநில அரசு கொண்டுள்ள சிறந்ததொரு முன்னெடுப்பைக் காட்டுகிறது," என்றார் அவர்.









