NutriSel-RMT கூட்டு முயற்சி: 160,000 மாணவர்களுக்கு ஊட்டச்சத்தான உணவு கிடைக்கின்றது

20 ஆகஸ்ட் 2026, 6:19 AM
NutriSel-RMT கூட்டு முயற்சி: 160,000 மாணவர்களுக்கு ஊட்டச்சத்தான உணவு கிடைக்கின்றது
NutriSel-RMT கூட்டு முயற்சி: 160,000 மாணவர்களுக்கு ஊட்டச்சத்தான உணவு கிடைக்கின்றது
NutriSel-RMT கூட்டு முயற்சி: 160,000 மாணவர்களுக்கு ஊட்டச்சத்தான உணவு கிடைக்கின்றது

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 20 - சிலாங்கூர் மாநிலத்தில் 'NutriSel' மற்றும் 'RMT' ஆகிய உணவு உதவித் திட்டங்களின் கூட்டு முயற்சியால், 1 லட்சத்து 60,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது பயனடைந்து வருகின்றனர்.

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 10 லட்சம் மாணவர்களில் அவ்வெண்ணிக்கை 15 விழுக்காடாகும்.

இதற்கு முன்பு RMT திட்டம் மட்டுமே இருந்தபோது சுமார் 55,000 மாணவர்கள் மட்டுமே பயன்பெற்றனர். அதாவது B40 பிரிவைச் சேர்ந்த 10 விழுக்காட்டுக்கும் குறைவான மாணவர்களுக்கே இலவச உணவு கிடைத்தது.

தற்போதைய NutriSel திட்ட அறிமுகத்தால், உணவு உதவி தேவைப்படும் இன்னும் பல ஏழை மாணவர்களுக்கு இந்த ஆதரவு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக, சிலாங்கூர் மாநில மெந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயா , டத்தோ ஹருன் சத்து தேசியப் பள்ளியில் , மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரி சிலாங்கூர் ஊட்டச்சத்து உணவுத் திட்டத்தைப் பார்வையிட்டார் . 20 ஆகஸ்ட் 2026 : படம் - மீடியா சிலாங்கூர்

தற்போது மூன்றாவது வாரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த NutriSel திட்டம், மாநிலம் முழுவதும் உள்ள 932 பள்ளிகளில் சுமார் 1 லட்சத்து 6,000 மாணவர்களை நேரடியாகச் சென்றடைகிறது.

இதன் மூலம் மாணவர்களுக்கு வாரத்திற்கு இரு முறை இலவச உணவு வழங்கப்படுகிறது. குறிப்பாகக் காலை நேர மாணவர்களுக்குச் சோறு, கறி, பழங்கள், காய்கறிகள் மற்றும் பானங்கள் அடங்கிய முழுமையான சத்தான உணவு வழங்கப்படுகிறது.

பெட்டாலிங் ஜெயா, தாமான் மேடான் இடைநிலைப் பள்ளியில் சிலாங்கூர் ஊட்டச்சத்து உணவுத் திட்டம் (NUTRISEL) மேற்கொள்ளப்படுகிறது படம் : மீடியா சிலாங்கூர்

இத்திட்டத்தின் தரத்தை உறுதி செய்வதற்காக, இதில் பங்கேற்கும் 90 விழுக்காடு பள்ளிகள் உணவின் தரம் மற்றும் அளவு குறித்த விரிவான அறிக்கையை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளன.

உணவு எப்போதும் புதியதாகவும், பாதுகாப்பாகவும், விநியோகத் தாமதங்கள் இல்லாமலும் இருப்பதை உறுதி செய்ய, வெளி முகவர்களிடம் (Caterers) கொடுக்கப்படாமல், அந்தந்தப் பள்ளிகளின் உணவகங்கள் மூலமாகவே நேரடியாகத் தயாரிக்கப்படுகிறது.

பள்ளி நிர்வாகங்களும் கல்வித் துறையும் உணவகங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து மதிப்பீடு செய்வதன் மூலம் இத்திட்டத்தின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

மாநில அளவில், மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு, பள்ளிகளிடமிருந்து நேரடியாகப் பெறப்படும் தினசரி கள அறிக்கைகளை ஆய்வு செய்து இத்திட்டத்தைக் கூர்ந்து கண்காணிக்கிறது.

இந்தத் தொடர்ச்சியான கண்காணிப்பு முறை, அரசாங்கம் இத்திட்டத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை உடனடியாக மதிப்பீடு செய்யவும், விநியோக முறைகளை மேம்படுத்தவும், மாணவர்களின் நலனைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

பெட்டாலிங் ஜெயா, தாமான் மேடான் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் (NUTRISEL) ஊட்டச்சத்து உணவு

மாநில அரசு இத்திட்டத்தின் முதல் மூன்று மாத காலத்திற்கு 1 கோடியே 40 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.

இதற்குக் கிடைக்கும் வரவேற்பு மற்றும் தேவையின் அடிப்படையில் இத்திட்டத்தை நீட்டிப்பது குறித்து அதிகாரிகள் பின்னர் பரிசீலிப்பார்கள்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.