ஷா ஆலாம், ஆகஸ்ட் 3: பாடாங் தெராப், ஜாலான் பத்து பெங்காசா 8 வது கிலோமீட்டரில் டொயோட்டா அவான்சா பல்நோக்கு வாகனம் (MPV) ஒன்று சாலையின் இரும்புத் தடுப்பு மீது மோதிய விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், அவரது மகன் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்த தகவல் இன்று காலை 7.40 மணிக்குக் கிடைத்ததாகப் பாடாங் தெராப் மாவட்ட காவல்துறை தலைவர் கண்காணிப்பாளர் முகமட் அனுவார் ஜுனோ கூறினார்.
முதற்கட்ட விசாரணையில் கோலா நேராங்கில் இருந்து டுரியான் புரோங் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த வாகனம், கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறத்தில் இருந்த இரும்புத் தடுப்பில் மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக நம்பப்படுகிறது.
இதன் காரணமாக, முன்பக்கப் பயணியின் இருக்கையில் அமர்ந்திருந்த 21 வயது ஓட்டுநரின் தாய் இருக்கையில் சிக்கிப் பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளார்.
வாகனத்தை முறையாகக் கட்டுப்படுத்தத் தவறிய கவனக்குறைவே இந்த விபத்திற்குக் காரணம் என்று நம்பப்படுவதாகக் குறிப்பிட்ட முகமட் அனுவார், மருத்துவ அதிகாரியால் சம்பவ இடத்திலேயே அந்த பெண்மணி இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
உடல் மேல் நடவடிக்கைகளுக்காக அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானியா பஹியா மருத்துவமனையின் (HSB) தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டப் பிரிவு 41 (1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் முகமட் அனுவார் தெரிவித்தார்.







