ஷா ஆலாம், ஆகஸ்ட் 3: செப்பாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு அருகில் உள்ள மலைப்பகுதியில் இன்று அதிகாலை சுமார் ஏழு ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் அஷ்ருல் ரிசால் அஷ்பார் கூறுகையில், இச்சம்பவம் குறித்த அவசர அழைப்பு இன்று அதிகாலை 1.28 மணி அளவில் தங்களுக்குக் கிடைத்ததாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர், செப்பாங் தீயணைப்பு நிலையத்தின் உதவியுடன் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
செப்பாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு அருகில் உள்ள மலைப்பகுதியில் இக்கட்டுப்பாடற்ற தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆபரேஷன் கமாண்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது தீயை அணைக்கும் தீவிரப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த மீட்பு மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகளில் மொத்தம் 14 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.








