கோலாலம்பூர், செப்.16 — செத்தியா ஆலாம் தேசியப் பள்ளியில் கடந்த திங்கட்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
அதில் வகுப்பறை ஒன்று முற்றாக எரிந்து சேதமடைந்தது. ஆரம்பகட்ட பழுதுபார்ப்பு மற்றும் மின்சார சீரமைப்பு பணிகளுக்காக் கல்வி அமைச்சு RM200,000 நிதியை ஒதுக்கியுள்ளது.
இச்சம்பவம் நிகழ்ந்த மறுநாளே அமைச்சின் தொழில்நுட்பக் குழு பள்ளிக்கு நேரடியாகச் சென்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
காவல்துறை மற்றும் தீயணைப்பு, மீட்புத் துறையின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், பள்ளியின் பாதுகாப்பான பகுதிகள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
விசாரணைகள் நிறைவடைந்ததும் பழுதுபார்ப்பு பணிகள் உடனடியாகத் தொடங்கும் என்றும் ஃபட்லினா தெரிவித்தார்.
இதனிடையே, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்னதாகவே தீயைக் கட்டுப்படுத்துவதற்கு விரைந்து செயல்பட்ட ஆசிரியர்களையும் அவர் பாராட்டினார்.







