ஷா ஆலம், ஆகஸ்ட் 2 — மகோத்தா பெரானாங் தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதில், அத்தொழிற்சாலையின் சுமார் 50 சதவீதப் பகுதி முழுமையாக எரிந்து சேதமடைந்தது.
இச்சம்பவம் தொடர்பாக இன்று அதிகாலை 5.18 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாகச் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பத்துறையின் இயக்க உதவி இயக்குனர் அஷ்ருல் ரிசால் அஷ்பார் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, செமினி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
இந்த தீ விபத்தில் கட்டிடத்தின் 50 சதவீதம் சேதமடைந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அஷ்ருல் உறுதிப்படுத்தினார்.
மேலும், காலை 6.46 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், இருப்பினும் தீயணைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.







