ஷா ஆலாம், ஆகஸ்ட் 1 - உலு சிலாங்கூரில் ஆசிரியை ஒருவரின் மரணம் ஒட்டுமொத்த சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அனைத்து முதலாளிமார்களும் தங்களது பணியிடங்களை மிகவும் பாதுகாப்பான மற்றும் ஊழியர்களின் மனநலத்திற்கு ஆதரவளிக்கக்கூடிய சூழலாக மாற்றியமைக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மனித வளத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் வெறும் இழப்பு மட்டுமல்ல, நாம் தினமும் பார்க்கும் ஒவ்வொருவரின் புன்னகைக்குப் பின்னால் வேறு எவராலும் பார்க்க முடியாத பல சுமைகளும் அச்சங்களும் அமைதியான போராட்டங்களும் மறைந்திருக்கக்கூடும் என்பதை உணர்த்தும் ஒரு கடுமையான எச்சரிக்கை என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
"எந்தவொரு வேலை இடமும் எவரும் தனித்துவிட்டதாகவோ, செவிமடுக்கப்படாதவர்களாகவோ அல்லது நம்பிக்கையற்றவர்களாகவோ உணரும் இடமாக இருக்கக்கூடாது" என்று அவர் தமது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பள்ளிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் அல்லது கட்டுமானத் தளங்கள் என எங்குப் பணியாற்றினாலும், ஒவ்வொரு தொழிலாளியும் கண்ணியம், கருணை மற்றும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஊழிர்கள் அச்சமின்றித் தங்களது கருத்துக்களைப் பேசுவதற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்றும், எழுப்பப்படும் குறைகள் தண்டனை அல்லது தீர்ப்புக்கு உள்ளாக்கப்படாமல் புரிதலுடன் அணுகப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், உதவி கோரும் ஊழியர்கள் மீது சமூக அவதூறுகளை (stigma) சுமத்தாமல், அவர்களுக்குத் தேவையான ஆதரவை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.







