ஷா ஆலாம், ஆகஸ்ட் 1 - உலு சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிலாங்கூர் மாநிலக் கல்வித்துறை (JPN) ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழன்று நிகழ்ந்த இச்சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள சிலாங்கூர் மாநிலக் கல்வித்துறை, இந்தத் துயரச் சம்பவம் தற்போது காவல் துறையின் தீவிர விசாரணையில் உள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், இந்த விசாரணை நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து வகையான ஒத்துழைப்பையும் கல்வித்துறை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், பாதிக்கப்பட்ட ஆசிரியரின் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை வழங்குவதே தங்களின் முதன்மையான நோக்கம் என்று கல்வித்துறை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளையில், இச்சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிச் சமூகம் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பிரத்தியேக உளவியல் மற்றும் மனநல ஆதரவு சேவைகளும் (Psychosocial support) உடனடியாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
விசாரணைப் பணிகள் எவ்விதத் தடையுமின்றிச் சுமூகமாக நடைபெறுவதற்கு ஏதுவாக, உறுதிப்படுத்தப்படாத மற்றும் முறையற்ற தகவல்களைச் சமூக வலைத்தளங்களில் பரப்புவதைத் தவிர்க்குமாறும், உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்தினரின் தனி உரிமைக்கு மதிப்பளிக்குமாறும் பொதுமக்களைக் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தச் சோதனையை எதிர்நோக்கியுள்ள குடும்பத்தினருக்கு இறைவன் மனவலிமையையும் தாங்கும் சக்தியையும் வழங்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநிலக் கல்வித்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.







