சிரம்பான், ஆகஸ்ட் 1 - நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 16ஆவது மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை தொடங்கியுள்ளது.
மாநிலத்தின் புதிய மக்களாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்காளர்கள் அனைவரும் இன்று தங்களின் ஜனநாயகக் கடமையைத் தீவிரமாக ஆற்றி வருகின்றனர்.
கடந்த பதினான்கு நாட்களாக நீடித்த அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரக் காலம் நேற்று நள்ளிரவுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்த நிலையில், இன்று காலை முதல் மக்கள் வாக்குச் சாவடிகளுக்குப் படையெடுத்து வருகின்றனர்.
இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ள மொத்தம் 859,760 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில், 7,391 பேர் அஞ்சல் வழி வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எந்த அரசியல் கூட்டணி ஆளப் போகிறது என்பதைத் தீர்மானிக்கும் மிக முக்கிய நாளாக இன்றைய தினம் அமைந்துள்ளது.
மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 401 வாக்குச் சாவடிகளில் காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு ஒரே நேரத்தில் தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் பெருமளவில் திரண்டு வந்து வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் ஆணையம் இந்த முறை 72 முதல் 75 விழுக்காடு வரை வாக்காளர் வருகையைப் பதிவு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. நள்ளிரவுக்குள் முழுமையான மற்றும் அதிகாரப்பூர்வமான தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன்கூட்டிய வாக்களிப்பில், ராணுவ மற்றும் காவல் துறைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் என மொத்தம் 14,995 முன்கூட்டிய வாக்காளர்கள் அதாவது 91.06 விழுக்காட்டினர் தங்களின் கடமையை மிகச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியத் தகவலாக வானிலை நிலவரம் அமைந்துள்ளது. மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, சிரம்பான், ஜெம்போல், ஜெலுபு, கோலா பிலா, தம்பின், போர்ட்டிக்சன் மற்றும் ரெம்பாவ் உள்ளிட்ட நெகிரி செம்பிலான் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று காலை முதல் மதியம் வரை வானிலை சீராகவும் காணப்படும்.
இருப்பினும், பிற்பகலுக்கு மேல் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, வாக்காளர்கள் முன்கூட்டியே சென்று வாக்களிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த முறை நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள மொத்தம் 36 சட்டமன்றத் தொகுதிகளுக்காக அனல் பறக்கும் போட்டி நிலவுகிறது. களத்தில் மொத்தம் 103 வேட்பாளர்கள் தீவிரப் போட்டியில் ஈடுபட்டுள்ளனர். கட்சிகளின் அடிப்படையில் பார்க்கும்போது, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி 36 தொகுதிகளிலும், பாரிசான் நேசனல் 25 தொகுதிகளிலும், பெர்சாத்து 24 தொகுதிகளிலும், பெரிக்காத்தான் நேசனல் 11 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
இது தவிர, பெர்சாசா, அஸ்லி மற்றும் மலேசிய சோசலிசக் கட்சி ஆகிய கட்சிகள் தலா ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளதோடு, சுயேச்சை வேட்பாளர்களாக நான்கு பேரும் களத்தில் இறங்கியுள்ளனர்.
தொகுதிகளின் போட்டி நிலவரத்தைப் பொறுத்தவரை, 22 சட்டமன்றத் தொகுதிகளில் மும்முனைப் போட்டியும், 11 தொகுதிகளில் நேரடி மோதலும் அதாவது ஒன்றுக்கு ஒன்று போட்டியும் நிலவுகிறது. மேலும், தலா இரண்டு தொகுதிகளில் நான்கு முனை மற்றும் ஐந்த முனைப் போட்டிகள் ஏற்பட்டு தேர்தல் களம் மிகவும் பரபரப்பாகியுள்ளது.
கடந்த 15ஆவது நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி 17 இடங்களைக் கைப்பற்றி முன்னிலை வகித்தது. அதனைத் தொடர்ந்து பாரிசான் நேசனல் 14 இடங்களையும், பெரிக்காத்தான் நேசனல் 5 இடங்களையும் வென்றிருந்தன.
கடந்த முறை தனித்தனியாகப் போட்டியிட்ட ஹராப்பானும் தேசிய முன்னணியும் இந்த முறை இணைந்து தேர்தலைச் சந்தித்துள்ளதால், இம்முறை எந்தக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.







