ஷா ஆலம், ஜூலை 21: ஜாலான் மேரு நிலையத்தில் நபர் ஒருவர் தண்டவாளப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த காரணத்தால், ஷா ஆலம் வழித்தடத்தின் எல்.ஆர்.டி 3 (LRT3) ரயில் சேவையில் இன்று காலை தற்காலிக இடையூறு ஏற்பட்டதாக ரேபிட் கேஎல் (Rapid KL) நிறுவனம் உறுதிப்படுத்தியது.
இன்று காலை சுமார் 6.15 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. ஊழியர்களும் துணைப் போலீசாரும் விரைந்து செயல்பட்டு சந்தேக நபரைக் கண்டுபிடித்துக் கைது செய்தனர்.
பின்னர் சந்தேக நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைக்காக பண்டார் பாரு கிள்ளான் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று ரேபிட் கேஎல் கூறியது.
பயணிகளின் பாதுகாப்பையும் சேவை இயக்கத்தையும் உறுதி செய்வதற்காக, ஜாலான் மேரு நிலையத்திற்கும் ஜாம்பாதான் கோத்தா நிலையத்திற்கும் இடையிலான இரயில் சேவை சுமார் 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
"அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், சேவை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு தண்டவாளம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது," என்று ராபிட் கேஎல் கூறியது. இந்தத் தற்காலிக இடையூறால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு ரேபிட் கேஎல் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
அதே வேளையில், தண்டவாளப் பகுதிக்குள் அத்துமீறி நுழைய வேண்டாம் என்று ரேபிட் கேஎல் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்பதுடன், கடுமையான பாதுகாப்பு அபாயங்களையும் ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
பொதுமக்கள், குறிப்பாக பயணிகள், தங்களைச் சுற்றியுள்ள சூழலைக் கவனித்து, சந்தேகத்திற்கிடமான ஏதேனும் செயல்களைக் கண்டால் உடனடியாக நிலைய ஊழியர்களுக்கோ அல்லது துணைப் போலீசாருக்கோ தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.







