பெட்டாலிங் ஜெயா, ஜூலை 30 : நெகிரி செம்பிலான் யாங் டி-பெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர், முன்னாள் மந்திரி பெசார் ராயிஸ் யாத்திமிற்கு வழங்கப்பட்ட மாநில விருதுகளை மீட்டுக் கொண்டார்.
முன்பு அம்னோவில் முக்கிய புள்ளியாக இருந்தவரான தற்போதைய வாவாசான் (Wawasan) தலைவர் ராயிஸ் யாத்திமிற்கு, 2001 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட 'ஸ்ரீ உத்தாமா' (Seri Utama) மற்றும் 'டத்தோ செத்தியா நெகிரி செம்பிலான்' (Dato’ Setia Negeri Sembilan) விருதுகள் மீட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக மாநிலச் செயலாளர் ஜாஃபிர் இப்ராஹிம் தெரிவித்தார்.
"நெகிரி செம்பிலான் அரச அமைப்பின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னாள் மேலவைத் தலைவருமான ராயிஸ், நெகிரி செம்பிலான் அரச குடும்பத்தில் தற்போது நிலவி வரும் சர்ச்சையில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.
துவாங்கு முஹ்ரிஸை நாட்டின் ஆட்சியாளர் பதவியிலிருந்து நீக்குவதற்காக மூன்று உண்டாங்-கள் (Undangs - பாரம்பரிய தலைவர்கள்) மற்றும் ஒரு முன்னாள் உண்டாங் மேற்கொண்ட நடவடிக்கைக்கு அவர் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்திருந்தார்.







