ஷா ஆலாம், ஜூலை 29 — நாளுக்கு நாள் சிக்கலாகி வரும் டிஜிட்டல் உலகச் சவால்களை எதிர்கொள்ள இளம் தலைமுறையினர் தைரியமாகத் தங்கள் ஆளுமையை உருவாக்கிக் கொள்வதோடு, விமர்சன ரீதியாகச் சிந்திக்கவும், தகவல்களை விவேகத்துடன் பகுத்தாராயவும் கற்றுக்கொள்ள வேண்டும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் முகமட் ஃபஹ்மி ஙகா கேட்டுக்கொண்டுள்ளார்.
புத்தாக்க கலாச்சாரத்திற்கான ஆட்சிக்குழு பொறுப்பை வகிக்கும் அவர், சமூகத்தில், குறிப்பாக இளையோர் மத்தியில் எதிர்மறையான எண்ணங்கள் உருவாவதைத் தவிர்க்க, தொழில்நுட்பங்களைப் பொறுப்புடனும் கவனத்துடனும் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
சமூக வலைத்தளங்களை முறையான கட்டுப்பாடின்றிப் பயன்படுத்துவது, தகவல்களைப் பகுத்தாயும் திறன் இல்லாவிட்டால் தவறான பழக்கவழக்கங்களையும் தீய எண்ணங்களையும் உருவாக்கும்.
எந்தவொரு தகவலையும் ஏற்கும் முன்போ அல்லது பரப்பும் முன்போ இளைஞர்கள் தங்கள் சுயப் புத்தியைக் கொண்டு சிந்திக்கவும், தகுந்த பரிசீலனை செய்யவும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் வேண்டும் என்றார் முகமட் ஃபஹ்மி.
மேலும், ஒவ்வொரு செயலும் உண்மையான தகவல்களின் அடிப்படையில்தான் அமைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அதேவேளையில், இளம் தலைமுறையினர் வலுவான ஆளுமையையும் திறந்த மனப்பான்மையையும் கொண்டிருக்க வேண்டும் என்றும், தீவிர இனவாத அடிப்படையிலான பழமைவாதச் சிந்தனைகளுக்கு அடிபணியாமல் எல்லாவற்றையும் பகுத்தறிவுடன் அணுக வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இதனிடையே, சிலாங்கூரின் எதிர்கால வாரிசுகளாகிய தங்களது குழந்தைகளின் திறன்களை நம்பி, அவர்களுக்கு எப்போது வழிகாட்டியாகத் திகழும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அவர் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இளைய தலைமுறையினர் ஆக்கப்பூர்வமானவர்களாகவும், போட்டித்தன்மை கொண்டவர்களாகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும் உருவாவதற்கு இவர்களின் தொடர்ச்சியான ஆதரவு மிக முக்கியமானது என்றும் அவர் கூறினார்.







