ஷா ஆலாம், ஜூலை 27: புஞ்சாக் அலாம் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை வெற்றிகரமாக பிற்பகல் 1:30 மணிக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து தீயணைப்புப் பணிகள் முழுமையாகப் பிற்பகல் 3 மணிக்கு நிறைவுபெற்றன.
சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஷ்ருல் ரீசால் அஸ்பார் வெளியிட்ட தகவலின்படி, இந்த சம்பவம் சுமார் 4.45 ஹெக்டேர் அதாவது 11 ஏக்கர் பரப்பளவு கொண்ட மலைப்பகுதியைப் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தீ முழுமையாக அணைக்கப்பட்ட பிறகு, தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் மீண்டும் தீப்பிடிக்கக் கூடிய எந்தவொரு சாத்தியக்கூறுகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்த முழுமையான சோதனைகளை மேற்கொண்டனர். அதன் பின்னரே இந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
மேலும், கோலா சிலாங்கூர் கல்வி மாவட்ட அலுவலகத்தின் உத்தரவின் பேரில், தீயணைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த இரண்டு பள்ளிகளான, புஞ்சாக் அலாம் 2 தேசியப் பள்ளி (SK) மற்றும் புஞ்சாக் அலாம் சமயத் தொடக்கப் பள்ளி (SRA) ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.







