கோலா சிலாங்கூர், ஜூலை 27 - கோலா சிலாங்கூர், பண்டார் புஞ்சாக் அலாம் 2 தேசியப் பள்ளியின் பின்புறம் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாகப் பள்ளி வளாகம் புகை மண்டலமாக மாறியது. அதனால், மாணவர்களின் நலன் கருதி இன்றைய மாலை நேரப் பள்ளி நேரம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
காட்டுத் தீயால் ஏற்பட்ட கடுமையான புகையினால் காலை நேர மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டதை அடுத்து, பள்ளி நிர்வாகம் உடனடியாகக் கூடி இந்த விடுமுறை முடிவை அறிவித்துள்ளது.
அனைத்து மாணவர்களின் நலனைக் காக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், இது குறித்த மேல் தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் பள்ளியின் அதிகாரப்பூர்வத் தகவல் தொடர்பு தளங்கள் மூலமாக உடனுக்குடன் அறிவிக்கப்படும் என்றும் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
சுமார் 0.8 ஹெக்டேர் பரப்பளவில் காட்டுத் தீ ஏற்பட்டதாகவும், இது குறித்து காலை 10.06 மணி அளவில் அவசர அழைப்பு பெறப்பட்டதாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பத்துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் அஷ்ருல் ரிசா அஸ்பர் தெரிவித்தார்.
இதற்கிடையில், இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த உடனேயே பள்ளி நிர்வாகம் துரிதமாகச் செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.







