பெட்டாலிங் ஜெயா, ஜூலை 25: ஈப்போவில் கைவிடப்பட்ட சுங்கை பாரி (Sungai Pari) அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று 14 வயதுடைய இரு பள்ளி மாணவிகள் இறந்து கிடக்கக் கண்டெடுக்கப்பட்டனர்.
அவ்விரு மாணவிகளும் முன்னதாக தங்கள் பள்ளி வளாகத்தை விட்டுத் தாங்களாகவே வெளியேறியதாக நம்பப்படுவதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் அல்வி ஜைனல் அபிடின் தெரிவித்தார்.
நேற்று மாலை 5 மணியளவில் அவ்விரு மாணவிகளும் கைவிடப்பட்ட அக்குடியிருப்பு பகுதியில் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
மருத்துவப் பணியாளர்கள் அவர்கள் இறந்துவிட்டதாக உறுதி செய்தனர்.
இந்தச் சம்பவத்தில் சந்தேகத்திற்கிடமான குற்றச் செயல் ஏதும் இல்லை . அதே வேளை, போலிஸ் பிரேத பரிசோதனை அறிக்கைகளுக்காக காத்திருப்பதாக அல்வி கூறினார்.
பாதிக்கப்பட்ட இரு மாணவிகளின் குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்ட அல்வி, பொதுமக்கள் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறும் , அச்சம்பவம் குறித்து வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டார்.
பாதுகாப்பு காரணங்களால் 2012 முதல் சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கைவிடப்பட்டது.
பாதுகாப்புக் காவலர் ஒருவர் தனது வழக்கமான ரோந்துப் பணியின் போது அவ்விரு மாணவிகளின் உடல்களைக் கண்டு போலிசுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
உயிரிழந்த அந்த பள்ளி மாணவிகள் இருவரும் நெருங்கியத் தோழிகள் என கூறப்படுகிறது.







