ஷா ஆலாம், ஜூலை 24 — நேற்றிரவு நேரிட்ட மோசமான தீ விபத்தில் சேதமடைந்த ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள சிலாங்கூர் மொத்த விற்பனை சந்தையை (Selangor Wholesale Market) மறுசீரமைப்பு செய்து மேம்படுத்துவது குறித்து மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றியுள்ள பகுதிகளின் விரைவான வளர்ச்சிக்கு ஏற்ப, 2001-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்தச் சந்தையை மேலும் நவீனமாகவும், பாதுகாப்பாகவும், தற்போதைய தேவைகளுக்கு ஏற்பவும் தரம் உயர்த்த வேண்டும் என ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ் அஸ்மி தெரிவித்தார்.
ஸ்ரீ கெம்பாங்கான், கின்ராரா, சுபாங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிவாசிகளுக்குத் தேவையான முக்கிய உணவு விநியோக மையங்களில் ஒன்றாக இந்த மொத்த விற்பனை சந்தை திகழ்கிறது.
“சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகமும் (PKPS) மாநில அரசும் இந்தச் சந்தைப் பகுதியை மறுசீரமைத்து, நவீனமாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறேன்” என்று அவர் கூறினார்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு (JBPM) அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
தீ விபத்துக்கான காரணம் குறித்துப் பொதுமக்கள் எவ்வித ஊகங்களையும் பரப்ப வேண்டாம் என்றும், தீயணைப்புத் துறையின் தடயவியல் பிரிவு முழுமையான விசாரணை நடத்த வழி விட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.







