ஷா ஆலம், ஜூன் 26 – இன்று நண்பகலில் ஶ்ரீ கெம்பாங்கான், தாமான் பிங்கிரான் புத்ராவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து நண்பகல் 12.12 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் செயல்பாட்டு உதவி இயக்குனர் அஷ்ருல் ரிசால் அஸ்பார் தெரிவித்தார்.
சம்பவ இடத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஶ்ரீ கெம்பாங்கான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்தும், சைபர்ஜெயா தீயணைப்பு நிலையத்திலிருந்தும் மொத்தம் 15 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பவ இடத்தை அடைந்தபோது, ஐந்து மாடி கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பிரிவில் தீ அசுர வேகத்தில் பரவிக் கொண்டிருந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.
தீயணைப்பு வீரர்களின் தீவிர போராட்டத்திற்குப் பிறகு, நண்பகல் 12.37 மணியளவில் தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டடு, பின்னர், மதியம் 2.05 மணியளவில் முற்றிலும் அணைக்கப்பட்டது.
இந்த விபத்தில் அந்த குடியிருப்பு பகுதி ஏறக்குறைய 80 விழுக்காடு சேதமடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் எவருக்கும் காயமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.






