கோலாலம்பூர், ஜூலை 22 - சிலாங்கூர் மாநிலத்தின் இரு மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலாங்கூரில் உலு சிலாங்கூர் மற்றும் கோம்பாக் ஆகிய மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற மோசமான வானிலை பேராக் மாநிலத்தின் லாரூட், மாத்தாங் டான் செலாமா, உலு பேராக், கோலா கங்சார், கிந்தா, கம்பார், பாத்தாங் பாடாங் மற்றும் முவாலிம் ஆகிய பகுதிகளிலும், கிளந்தான் மாநிலத்தின் குவா மூசாங் பகுதியிலும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், திரங்கானுவின் செதியூ, கோலா நெருஸ், உலு திரங்கானு, கோலா திரங்கானு, மாராங், டுங்குன் மற்றும் கெமாமான் ஆகிய இடங்களிலும், பகாங்கின் கேமரன் மலை, லிப்பிஸ் மற்றும் ஜெராந்துட் ஆகிய பகுதிகளிலும், ஜோகூரின் மெர்சிங் மாவட்டத்திலும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சபாவின் சில பகுதிகள், சரவாக், மற்றும் கூட்டரசு பிரதேசமான லாபுவானிலும் மோசமான வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய இடி மின்னல் எச்சரிக்கையானது குறுகிய கால அறிவிப்பாகும் என்றும், இது வெளியிடப்பட்ட நேரத்தில் இருந்து அதிகபட்சமாக ஆறு மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






