ஷா ஆலாம், ஜூலை 22 - நேற்று அதிகாலை சபா, தாவாவ், கம்போங் ஜாவா பகுதியில் புதர் பகுதியில் பெண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, எஸ்.பி.எம் முடித்த பதின்ம வயது இளைஞர் ஒருவர் விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தாவாவ் மாவட்ட காவல் தலைமையக குற்றவியல் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் ரொபியாதுல் அடவியா ஜாப்ரி செய்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட், எதிர்வரும் ஜூலை 25-ஆம் தேதி வரை அந்த இளைஞரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
நேற்று காலை மணி 6 அளவில், கம்போங் ஜாவாவில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகிலுள்ள புதர் பகுதியில் 3.1 கிலோ எடைக் கொண்ட அந்தப் பெண் குழந்தையைப் பொதுமக்கள் கண்டெடுத்தனர். பின்னர், அக்குழந்தை மேல் சிகிச்சைக்காக தாவாவ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், நேற்று காலை மணி 10.40 அளவில் கம்போங் ஜாவா செந்தோசா, ஜாலான் குருவில் உள்ள ஒரு வீட்டிற்கு முன்பாக இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் அந்த இளைஞரைப் காவல்துறையினர் கைது செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக, அடுத்த அரை மணி நேரத்தில் அதே கிராமத்தில் உள்ள 15 வயது இளம்பெண் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில், அந்த இளம்பெண் வெளிநாட்டவர் என்பதும், முறையான பயண ஆவணங்கள் இன்றி நாட்டில் தங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது. குடிநுழைவுத் துறை சட்டம் 1959/63-இன் கீழ் அவர் 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, தற்போது அப்பெண் குழந்தையுடன் தாவாவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து இரண்டு புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், குற்றவியல் சட்டத்தின் 317-வது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தாவாவ் இடைக்கால மாவட்டக் காவல்துறை தலைவர் சூப்ரிண்டன்ட் விலிண்டன் எஞ்சானா வாட் தெரிவித்துள்ளார்.







