கோலாலம்பூர், ஆகஸ்ட் 28: டேசா பார்க் சிட்டியில் இடம்பெற்ற கொலை-தற்கொலைச் சம்பவத்தில், சந்தேக நபரின் மனைவி காதல் மோசடியில் சிக்கி RM260,000 இழந்தார்.
இதனை 48 வயதான அந்தச் சந்தேக நபர் தனது தற்கொலைக்கு முன்னர் எழுதி வைத்திருந்த குறிப்பில் தெரிவித்துள்ளதாகக் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ஃபாடில் மார்சுஸ் கூறியுள்ளார்.
அந்தக் குறிப்பில், 47 வயதான தனது மனைவி காதல் மோசடியில் ஈடுபட்ட ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதன் காரணமாக RM260,000 இழப்பையும் கடனையும் சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் சந்தேக நபர் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்ததார்.
இதனிடையே, அந்நபர் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளை கொலை செய்வதற்குப் பயன்படுத்தியதாக நம்பப்படும் கத்தி மற்றும் ஒரு ஜோடி கையுறைகள், படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்டதாகப் போலீஸ் தெரிவித்துள்ளது.
குடியிருப்பு பிரிவிலிருந்து சந்தேக நபர் கீழே விழுந்து உயிரிழந்தார். மனைவி மற்றும் பிள்ளைகளின் சடலங்கள் குடியிருப்பின் வெவ்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டதாக ஃபாடில் கூறினார்.
மேலும், சந்தேக நபர் தனது தந்தைக்கு சொந்தமான நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றி வந்ததாகவும், அவரது மனைவி இல்லத்தரசியாக இருந்ததாகவும் போலீஸ் தலைவர் தெரிவித்தார்.
கொலைச் சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







