கோலாலம்பூர், ஜூலை 22 — கிழக்குக் கரை மாநிலம் ஒன்றில், போலி சாலைப் பராமரிப்புத் திட்டத்தை நம்பி, நிறுவன இயக்குநர் ஒருவர் RM10 மில்லியனை இழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து கடந்த திங்கள்கிழமை காவல்துறைக்குப் புகார் வந்துள்ளதாகப் பிரிக்பீல்ட்ஸ் மாவட்டக் காவல்துறை தலைமை உதவி ஆணையர் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.
"ஆரம்பக்கட்ட விசாரணையில், 2024-ஆம் ஆண்டில் புகார்தாரருக்கு நபர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அவர் கிழக்குக் கரை மாநிலத்தில் சாலைப் பராமரிப்புத் திட்டத்தைப் பெறுவதற்கு ஒரு கூட்டுத் தொழில் (Joint Venture) வாய்ப்பை வழங்கியுள்ளார்.
அந்தத் திட்டத்தில் கூட்டாண்மை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புகார்தாரர் சந்தேக நபரின் தனிப்பட்ட கணக்கில் இரண்டு தவணைகளாக மொத்தம் RM10 மில்லியனைச் செலுத்தியுள்ளார்," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், புகார்தாரர் 2025-இல் மேற்கொண்ட சரிபார்ப்புகளின் மூலம் அப்படி ஒரு திட்டமே இல்லை என்பது தெரியவந்துள்ளதாக ஹூ கூறினார்.
"புகார்தாரர் சந்தேக நபரிடம் விளக்கம் கேட்க முயன்றபோது, அவர் பல்வேறு சாக்குப்போக்குகளைக் கூறியுள்ளார். தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த புகார்தாரர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்," என்றார்.
விசாரணை இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதாகவும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கு மோசடிக்கான குற்றவியல் சட்டப் பிரிவு 420-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
"வணிகக் குற்ற விசாரணைகளுக்குக் கைது நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன், முழுமையான ஆவணங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட சாட்சிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுவது அவசியம்.
நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்கை நிரூபிக்க அரசுத் தரப்பிடம் போதுமான ஆதாரங்கள் இருப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை முக்கியமானது," என்று அவர் கூறினார்







