ஷா ஆலாம், செப்.4 : செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தை அமலாக்கத் துறைகள் விரைவாகக் கற்றுத் தேர்ச்சி பெற வேண்டும்.
இல்லையெனில் அதைப் பயன்படுத்தும் குற்றவாளிகளிடம் பின்தங்கும் அபாயம் இருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில் எச்சரித்துள்ளார்.
ஏஐ தொழில்நுட்பத்தை யார் முதலில் திறம்படக் கையாளக் கற்றுக்கொள்கிறார்களோ, அவர்களுக்கே சாதகமான நிலை உருவாகும் என்று அவர் கூறினார்.
அமலாக்கத் துறைகள் ஏஐ தொழில்நுட்பத்தை விரைவாகக் கற்றுத் தங்களது செயல்பாடுகளில் பயன்படுத்தத் தொடங்கினால், குற்றச்செயல்களை எதிர்கொள்வதில் அவை முன்னிலை பெறும்.
மாறாக குற்றவாளிகள் ஏஐ தொழில்நுட்பத்தை விரைவாகக் கற்றுக்கொண்டால், அதிகமான மக்களைப் பாதிக்கக்கூடிய நிலை ஏற்படும் என்றும் சைஃபுடின் அறிவுறுத்தினார்.
பெருகிவரும் அதிநவீன குற்றச்செயல்களை எதிர்கொள்வதற்கு கொள்கை வகுப்பாளர்களும் அமலாக்கத் துறைகளும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அவசியம்.
குறிப்பாக, எல்லை தாண்டி செயல்படும் குற்றவியல் கும்பல்கள் ஏஐ தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களை விரைவாகப் பயன்படுத்திக் கொள்வது அமலாக்கத் துறைகளுக்குப் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.
இதனிடையே, உள்துறை அமைச்சின் பணியாளர்களிடையே ஏஐ தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதற்கான தயார்நிலை தற்போது 75 விழுக்காடு அளவில் இருப்பதாகவும் சைஃபுடின் தெரிவித்தார்.






