கோலாலம்பூர், ஜூலை 22 — பெண் ஒருவர் எவ்வித அச்சமுமின்றித் தனது கைகளால் பாம்பைப் பிடிக்க முயலும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி, பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
அந்தப் பதிவில், குறிப்பிட்ட பெண், நீர்த் தேக்கத்தில் இருந்த பாம்பைப் பிடிப்பதற்காகக் குனிந்து அதன் வாலைப் பிடித்து இழுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், அப்பெண் பாம்பு நெளிந்து தப்பிக்க முயன்றபோதும் அதைத் தொடர்ந்து இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது சுற்றிலும் சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்தக் காணொளியைப் பகிர்ந்த பயனர், நகைச்சுவையாக "தீயணைப்புத் துறை அப்பெண்ணிடம் உதவி கேட்டதா அல்லது அப்பெண் தீயணைப்புத் துறையை அழைத்தாரா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், அப்பெண் பாம்பின் வாலைப் பிடித்துக்கொண்டிருக்க, பழுப்பு நிறச் சட்டை அணிந்த நபர் ஒருவர் துடைப்பத்தால் பாம்பின் தலையில் அடிக்க முயல்வதும் அதில் பதிவாகியுள்ளது.
தற்போது இந்தக் காணொளி இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.







