சிங்கப்பூர், ஜூலை 22- பிறப்பு விகிதக் குறைவு மற்றும் வேகமாக அதிகரித்து வரும் முதியோர் மக்கள் தொகை ஆகிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில், குடும்பம் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டிற்காகச் சிங்கப்பூரும் ஜப்பானும் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளன.
செவ்வாய்க்கிழமையன்று, சிங்கப்பூரின் சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகத்திற்கும் (MSF) ஜப்பானின் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் முகமைக்கும் இடையே இது தொடர்பான ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOC) கையெழுத்தானது.
சிங்கப்பூர் சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசாகோஸ் சுல்கிப்ளி டோக்கியோவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது குறித்து MSF வெளியிட்ட அறிக்கையில், குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி தொடர்பான சிறந்த நடைமுறைகள், தகவல்கள், ஆராய்ச்சிகள், ஆய்வுகள் மற்றும் புள்ளிவிவரத் தரவுகளை இரு நாடுகளும் பகிர்ந்துகொள்ள இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 24 வரை ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மசாகோஸ் சுல்கிப்ளி பேசுகையில், இந்த ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவையும், பலமான குடும்பங்களை உருவாக்கவும் குழந்தைகளின் சீரான வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் உள்ள கூட்டு அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது என்றார்.
"சிங்கப்பூரும் ஜப்பானும் ஒரே மாதிரியான மக்கள் தொகை சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் குறைந்த பிறப்பு விகிதம் போன்ற சூழலில், குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை ஆதரிப்பதில் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதும் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வதும் பெரும் மதிப்பை அளிக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.







