ஷா ஆலம், ஜூலை 4: ஜோகூர்-சிங்கப்பூர் எல்லையில் காத்திருக்கும் நேரத்தை 50 விழுக்காடு வரை குறைப்பதற்கான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பரிந்துரை, திறம்பட செயல்படுத்தப்பட்டால், மாநிலத்திற்கு மிக விரைவான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சிறந்த முயற்சியாக அமையும் என பொருளாதார நிபுணர் பேராசிரியர் எமரிட்டஸ் டாக்டர் பார்ஜோயாய் பார்டாய் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, தினசரி ஜோகூர் மற்றும் சிங்கப்பூர் இடையே பயணம் செய்யும் தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், தளவாடச் செலவுகளைக் குறைக்கவும், எல்லை கடந்த வர்த்தகத்தை விரைவுபடுத்தவும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்தவும் உதவும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நவீன பொருளாதாரத்தில் நேரமும் ஒரு செலவினமாகக் கருதப்படுவதால், சேமிக்கப்படும் ஒவ்வொரு மணி நேரமும் ஒட்டுமொத்த பொருளாதாரத் திறனை மேம்படுத்துவதற்குப் பங்களிக்கும்.
மேலும், முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக நம்பிக்கை ஏற்படுவதோடு, சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும் என்றும், மக்கள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான மன அழுத்தமும் நேர விரயத்திற்கான செலவுகளும் குறையும்.
இருப்பினும், இந்த இலக்கை அடைவதற்கு மலேசிய மற்றும் சிங்கப்பூர் அரசாங்கங்களுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பு தேவை.
இதில் குடிநுழைவுத் துறையின் அமைப்பை மேம்படுத்துதல், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் இரு நாடுகளின் எல்லை நுழைவாயில்களில் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல் ஆகியவை அடங்கும்.







