ஷா ஆலாம், ஜூலை 21 — இம்மாத தொடக்கத்தில் பந்திங் இடைநிலைப் பள்ளியில் மாணவி ஒருவர் தனது சக மாணவியைக் கத்தியால் குத்திய சம்பவத்திற்குப் பின்னணியில், குறிப்பிட்ட ஏதேனும் சமூகம் அல்லது குழுக்களின் தூண்டுதல் இருந்ததா என்பது குறித்துப் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் 14 வயதுடைய மற்றொரு நபர் கைது செய்யப்பட்ட போதிலும், அவருக்கு இதில் தொடர்பில்லை எனத் தெரியவந்ததைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்தார்.
"சந்தேக நபர் ஏன் இப்படிச் செயல்பட்டார் என்பதற்கு ஏதேனும் குழுக்கள் அல்லது சமூகங்கள் காரணமாக இருந்ததா என்பதைக் கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது வாட்ஸ்அப் அரட்டைக் குழுக்களில் (WhatsApp Group) இணைந்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் நண்பர்களின் தூண்டுதலாகக்கூட இருக்கலாம்; அதுவே சந்தேக நபரை இப்படிச் செய்யத் தூண்டியிருக்கக்கூடும். எனினும், இதில் ஒரே பள்ளியைச் சேர்ந்த நபர்களுக்குத் தொடர்பில்லை," என செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பான ரகசியக் குறிப்பு ஒன்று வழக்குச் சான்றாக இருக்கும் வேளையில், அது எவ்வாறு சமூக ஊடகங்களில் கசிந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஷாஸெலி தெரிவித்தார்.
"பாதிக்கப்பட்ட மாணவி ஜூலை 13 அன்று மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது குடும்பத்தினரின் பராமரிப்பில் குணமடைந்து வருகிறார்," என்றும் அவர் குறிப்பிட்டார்.







