கோலாலம்பூர், ஜூலை 21 — நீதிமன்றத்தால் ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தம் அல்லது ரத்து செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து வாகனங்களை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்களுக்கு, '2026 சாலைப் போக்குவரத்து (திருத்த) மசோதாவின்' கீழ் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 32-இல் கொண்டுவரப்படும் இந்தத் திருத்தம், சட்டத்திற்குக் கீழ்ப்படிவதை ஊக்குவிக்கவும், சாலை விபத்துகளின் அபாயத்தைக் குறைக்கவும் தற்போதைய தண்டனைகளை கடுமையாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது எனத் துணைப் போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபொல்லா தெரிவித்தார்.
இந்தத் திருத்தத்தின் மூலம், அதிகபட்ச சிறைத்தண்டனை ஓராண்டிலிருந்து 3 ஆண்டுகளாக உயர்த்தப்படும்; அதே வேளையில், அபராதத் தொகை RM3,000 முதல் RM10,000 வரை உயர்த்தப்படும்
இதனிடையே, வழக்கமான எரிபொருள் வாகனங்களைப் போல மின்சார வாகனங்களில் (EV) எஞ்சின் எண்கள் இல்லாததைக் கருத்தில் கொண்டு, இச்சட்டத்தின் பிரிவு 10-இல் செய்யப்படும் திருத்தங்கள் மூலம் மின்சார வாகனப் பதிவுகளுக்கும் கடுமையான விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுவதாக ஹஸ்பி கூறினார்.
"மின்சார வாகனங்களைப் பொறுத்தவரை, அவை தெளிவான, எளிதில் பார்க்கக்கூடிய மற்றும் சேதப்படுத்தப்படாத 'எலக்ட்ரிக் மோட்டார் வரிசை எண்' (Serial Number) மற்றும் சசிஸ் எண் (Chassis Number) ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை இத்திருத்தம் தெளிவுபடுத்துகிறது," என்றார்.







