கிள்ளான், ஆகஸ்ட் 28: இந்த மாத தொடக்கத்தில் இந்தோனேசிய ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், இருவர் மீது இன்று கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
37 வயதான முகமட் அஸ்னாவி கசாலி மற்றும் 25 வயதான மூசா ரம்லி ஆகிய இருவரும், மாஜிஸ்திரேட் சித்தி சுபைடா மஹாட் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, அவற்றைப் புரிந்துகொண்டதாகத் தெரிவித்தனர்.
எனினும், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்பதால், அந்த இருவரிடமிருந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
இவர்கள் இருவரும் மற்றொரு ஆடவருடன் இணைந்து 47 வயதான சுஹெர்மான் என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி காலை 6.30 மணியளவில், கம்போங் பாரு தெலோக் கோங் பகுதியில் உள்ள வீடொன்றில் இந்தக் கொலைச் சம்பவம் நிகழ்ந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இருவரும் குற்றவியல் சட்டம், பிரிவு 302இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
இந்தப் பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மரண தண்டனை விதிக்கப்படாத பட்சத்தில், குற்றவாளிக்கு குறைந்தது 12 தடியடிகள் விதிக்கப்படலாம்.







